Friday, July 16, 2010

படைத்தவர்களை விஞ்சும் பாத்திரங்கள்!

கல்கி அவர்களின் பிரபல சரித்திர நாவலான "பொன்னியின் செல்வனை" பலரும் படித்திருப்பீர்கள். அந்த நாவல் சோழப் பேரரசனான ராஜ ராஜ சோழனின் இளமைக் கால சம்பவங்களின் அடிப்படையில் எழுதப் பட்டது.




எல்லாவகையிலும் சோழ சாம்ராஜ்யத்தின் அரசு பதவிக்கு தகுதியானவனாகவும் மக்கள் செல்வாக்கு மிகுந்தவனாகவும் இருந்த போதும் தனக்கு வந்த அரியணை வாய்ப்பை தனது சித்தப்பனுக்கு விட்டுக் கொடுத்த மேலான குணத்தை விளக்குவதையே அடிப்படை நோக்கமாக கொண்டு, ராஜராஜ சோழனின் பல பெயர்களில் ஒன்றான பொன்னியின் செல்வன் என்ற தலைப்பிலேயே, அந்த நாவல் எழுதப் பட்டது. நாவலின் விறுவிறுப்பைக் கூட்டுவதற்காக மட்டுமே, கோமாளித்தனமும் குறும்பும் நிறைந்த ஒரு இளம் வீரனாக வந்தியத் தேவன் கதாபாத்திரம் அறிமுகப் படுத்தப் பட்டாலும், பின்னர் கதை போகும் போக்கில் நாவலின் ஆசிரியரே ஒரு கட்டத்தில், "நமது கதையின் நாயகனாகிய வந்தியத் தேவன்" என்று சொல்லும் அளவுக்கு அந்த பாத்திரம் வெற்றி பெற்று விடுகிறது. மேலும் இன்றளவும் அந்த கேரக்டர் நம் மனதில் அழியாமல் நிலை கொண்டுள்ளது.



சமீபத்தில் வெளி வந்து சக்கைப் போடு போட்ட பைரேட்ஸ் ஆப் கரீபியன் என்ற தொடர் சினிமாவில், ஜானி டெப் ஒரு கோமாளி துணை கதாப் பாத்திரமாகவே படைப்பாளிகளால் அறிமுகப் படுத்தப் பட்டாலும், அந்த பாத்திரத்திற்கு மக்கள் கொடுத்த ஆதரவுக்குப் பின்னர் அவரே அந்த சினிமாவின் கதாநாயகன் ஆக அறியப் படுகிறார். இது அந்த கதாபாத்திரத்தின் வெற்றி மற்றும் அதை ஏற்று நடித்தவரின் வெற்றியும் ஆகும்.



இப்படி இன்னும் கூட பல உதாரணங்கள் சொல்ல முடியும். தமிழ் திரையுலகில் கூட ரஜினி, சத்தியராஜ், பிரகாஷ் ராஜ் போன்றவர்கள், அவர்களின் ஆரம்ப கால திரைப்படங்களில் சிறிய பாத்திரங்களாகவும் வில்லன்களாகவும் அறிமுகமானாலும் அந்தந்த படங்களில் நடித்த கதாநாயகர்களை விட அதிகப் புகழ் பெற்றுள்ளனர். இதற்கும் அவர்களின் தனித் திறமையும் கடும் உழைப்புமே காரணம் ஆகும்.



இந்த எதிர்வினைகள் நிழல் வாழ்வுக்கு மட்டுமல்ல, நிஜ வாழ்வுக்கும் பொருந்தும்.



கடவுள் ஒரு மனிதனை எப்படி படைத்திருந்தாலும் சரி, எந்த நோக்கத்திற்காக எங்கு படைத்திருந்தாலும் சரி அல்லது சமூகம் அவனை எங்கே வைத்தாலும் சரி எப்படி சுரண்டினாலும் சரி, அவனால் தனித்து நிற்க முடியும் ஜெயிக்கவும் முடியும்.



ஆப்ரகாம் லிங்கன், எடிசன், அம்பேத்கர், போன்ற மாபெரும் சாதனையாளர்கள் சாதனையாளர்கள் முதல் நாம் இன்று பார்க்கும் எத்தனையோ வெற்றியாளர்கள் இந்த கருத்தினை உறுதி செய்கிறார்கள்.



உங்கள் பெற்றோர் வசதி வாய்ப்பில்லாதவர்களா? பரவாயில்லை, உங்களுக்கு இளமையில் நல்ல கல்வி மற்றும் இதர வாய்ப்புக்கள் கிடைக்க வில்லையா? பரவாயில்லை, உங்கள் தகுதிக்கு ஏற்ற வாய்ப்புக்களை இந்த சமூகம் கொடுக்காமல் ஒதுக்கி வைக்கிறதா? கவலையில்லை. சுற்றமிருப்போர் உங்களை வஞ்சிக்கிறார்ககளா? வருத்தமில்லை.



உங்கள் கேரக்டர், உங்கள் பண்புகள் உங்கள் கடும் உழைப்பு மட்டும் போதும். வாழ்க்கை நாடகத்தில் உங்களை ஒரு பாத்திரமாக படைத்தவர்களையும் படுத்துபவர்களையும் விஞ்சலாம்.



நிழல் பாத்திரங்கள் செய்து காட்டியதை, உயிருள்ள நிஜ பாத்திரங்களாகிய நம்மால் செய்ய முடியாதா என்ன?